திருச்சி, டிச. 7: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிவிழா பகல்பத்து உற்சவத்துடன் நாளை (8ம் தேதி) துவங்குகிறது. இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியும், வருகிற 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருமொழி திருவிழா நாளை (8ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டிஇன்று (7ம் தேதி) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பு காயத்ரி மண்டபத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும். நிகழ்ச்சியில் அரையர்கள், பட்டர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். பகல்பத்து உற்சவம் நாளை (8ம் தேதி) துவங்குகிறது. அதையடுத்து பகல்பத்து உற்சவ காலத்தில் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து பல்வேறு விதமான அலங்காரத்தில் விலைமதிப்பில்லா திருவாபரணங்கள் அணிந்து வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.