×

பட்டுக்கோட்டை கோர்ட் வளாகத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

பட்டுக்கோட்டை, டிச. 7: பட்டுக்கோட்டை கோர்ட் வளாகத்தில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனைவிழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் சுப்பையன் (60). இவரது மகன் சிவக்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வெளிநாட்டில் சிவக்குமார் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் வாய்தா பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வந்துள்ளது. முதல் வாய்தாவில் ஆஜராவதற்கு சிவகாமி தனது குழந்தையுடன் வந்தார்.

அப்போது தனது மகன் விவாகரத்து வழக்கு வாய்தாவுக்கு ஆஜராக யார் வந்துள்ளார் என்று பார்ப்பதற்காக ேகார்ட்டுக்கு சுப்பையன் வந்திருந்தார். பின்னர் சார்பு நீதிமன்றத்தின் வெளியில் வளாகத்தில் பார்வையாளர் வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சுப்பையன் அமர்ந்திருந்தார்.பின்னர் அவர் வாய்தாவுக்கு ஆஜராக வந்த மருமகள் சிவகாமி, குழந்தையை பார்த்தார். சிறிது நேரத்தில் சுப்பையன் அப்படியே பெஞ்சிலிருந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து சுப்பையன் உடலை அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.




Tags : court premises ,Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...