ஸ்ரீபெரும்புதூர், டிச.7: சென்னை குரோம்பேட்டை நேரு நகர் மகாதேவன் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (66). இவரது மனைவி ஷியாமளா (64). நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு டிராவல்ஸ் காரில் சென்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த டிரைவர் கணேஷ்குமார் (33) காரை ஓட்டினார். அங்கு கோயில்களில் தரிசனம் முடிந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வண்டலூர் வாலாஜாபாத் சாலை செரப்பணஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி, எந்த செய்கையும் காட்டாமல், திடீரென வலது புறம் திரும்பியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.இதை பார்த்ததும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். விபத்து ஏற்பட்டது அறிந்ததும், அப்பகுதி மக்கள் திரண்டனர். உடனடியாக படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். ஷியாமளா, கார் டிரைவர் கணேஷ்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.