வேலூர், டிச.7:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு மழை காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, காலரா, காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் உடல் நல பாதிப்புகளிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.