வைகைக்கரையில் 4 வழிச்சாலை அமைந்தால் கோரிப்பாளையம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா? மேம்பாலம் கட்டுவதா... வேண்டாமா... ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்

மதுரை, டிச. 6: வைகை ஆற்றின் இருபுறமும் 4 வழிச்சாலை அமைந்தால் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டாமல் சமாளிக்க முடியுமா? என்பது குறித்து புதிய ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் இடியாப்பச் சிக்கலாய் இருந்து வருகிறது. 11 வீதிகள் சந்திக்கும் இந்த முக்கிய சந்திப்பில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நகரில் பல முக்கிய வீதிகளை ஒருவழிப்பாதையாக மாற்றினாலும், இந்த சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவது, காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இடத்தில் அறிவிக்கப்பட்ட பறக்கும் பாலம் திட்டமும், மேம்பால திட்டமும் பல சிக்கல்களால் முடங்கிக் கிடக்கின்றன.

இந்த சூழலில் தற்போது வைகையாற்றின் கரையோரம் இருபுறமும் சாலையை 10 கி.மீ. தூரம், அதாவது மேற்கில் துவரிமான் அருகே, தேசிய நான்குவழிச்சாலை, கிழக்கில் விரகனூர் ரிங்ரோடு வரை இணைத்து ரூ. 325 கோடியில் நான்குவழிச்சாலையாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறப்பட்டால், கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டாமல் போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியுமா? என ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வைகையாற்றின் கரையோரம் இருபுற சாலைகள் விரிவாக்கம் செய்தால், மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் பல்வேறு சாலைகளில் பிரிந்து செல்லும். இதனால் கோரிப்பாளையம், யானைக்கல், சிம்மக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்களின் போக்குவரத்து கணிசமாக குறையும். கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பை சுற்றியுள்ள விசாலமான இடங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகையில், * அழகர்கோவில் சாலையில் தமுக்கத்தில் இருந்தும் வரும் வாகனங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலைக்கு திரும்புகிறது. அதில் ‘ப்ரீ லெப்ட்’க்கு குறுகிய இடமே உள்ளது. மேலும் வைகை ஆற்றை நோக்கி செல்லும் வாகனங்கள் சிக்னலுக்காக நிற்கும்போது, ‘ப்ரீ லெப்ட்” வாகனங்களும் காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வழி உண்டு. நடுரோட்டில் காவல் துறை ‘அவுட்போஸ்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் டூவீலர்களும் நிறுத்தப்படுகின்றன. இந்த அவுட் போஸ்ட்டை ஓரத்துக்கு இடமாற்றம் செய்யலாம்.

* ப்ரீ லெப்ட் திரும்பும்போது அகன்ற பிளாட்பாரத்தின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த பிளாட்பாரத்தை குறைத்து, மின்கம்பங்களை ஓரமாக மாற்றலாம். அங்குள்ள சாலையோர கடைகளை அகற்றலாம். * இந்த நெருக்கடியான பகுதியில் மினி பஸ் நிறுத்துமிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் உள்ளே சென்று திரும்பும்போது நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மினி பஸ்கள் நிறுத்துமிடத்தை காலி செய்து, பனகல் சாலையில் அரசு மருத்துவமனையை கடந்து செல்ல வசதி உள்ளது. இது போன்ற நடவடிக்கை மூலம் அங்கு விசாலமாக இடம் கிடைக்கும். அதில் “U” வடிவ திருப்பம் உண்டாக்க முடியுமா? என்பது காவல்துறையின் துல்லிய ஆய்வுக்கு பிறகே கண்டறிய முடியும்.

* மேம்பாலம் கட்ட முடியாத சூழலில் வைகை ஆற்றில் நான்குவழிச்சாலை திட்டம் நிறைவேறும் வரை காத்திருக்காமல், கோரிப்பாளையம் சந்திப்பு நெருக்கடியை தீர்க்க அவசர சிகிச்சை அளிக்க வேண்டியது, காவல் துறை கமிஷனர் கையில் உள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: