புதுக்கோட்டை, டிச.6: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (7ம் தேதி) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதே கல்வித் தகுதிகளையுடைய மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு கடனுதவி, சுயதொழில் தொடங்குதல், திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வும் வழங்க துறை சார்ந்த வல்லுநர்களும் கலந்துகொள்ள இருப்பதால் இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.