விழுப்புரம், நவ. 21: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளவனூர் குறு வட்டத்தில் கிராமங்களில் நடப்பு சம்பா பருவத்திற்கு 11000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா நெல் பயிருக்கு இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரமான யூரியாவை இடுவதால் பயிருக்கு தேவையான தழைச்சத்து மட்டுமே இட வேண்டும். உரச்
செலவை குறைக்கவும் வழி செய்கிறது. நெல் நடவு செய்த 14வது நாளில் இருந்து அல்லது நேரடி விதைப்பில் விதைத்த 21வது நாள் முதல் வாரம் ஒருமுறை கதிர் வெளிவரும் தருணம் வரை கணக்கீடு செய்ய வேண்டும். வயலில் 10 இடங்களில் கணக்கீடு செய்ய வேண்டும்.குறைவாக தழைச்சத்து தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்ற பயிர்களுக்கு இலை வண்ண அட்டையில் உள்ள 3வது நிறத்தையும், மற்ற ரகங்களுக்கும் 4வது நிறத்தையும் ஒப்பீடு செய்ய வேண்டும். கணக்கீட்டில் பச்சை வண்ண அட்டையின் நிறத்தை விட பயிர் நிறம் 6 இடங்களுக்கு மேல் குறைவாக இருந்தால் வறட்சியான சூழலில் 30 கிலோ யூரியா ஒரு ஏக்கருக்கும் மழை நேரங்களில் 25 கிலோ யூரியா ஒரு ஏக்கருக்கும் இட வேண்டும். எனவே, இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரமிட்டு அதிக மகசூல் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.