திருச்சி, நவ.21: கூட்டுறவுத்துறையில் உள்ள பொது ேசவை மையம் மூலமாக ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 85 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினார். விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 2017-18ம் ஆண்டில் ரூ.10.44 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதுவரை 1,01,458 மகளிருக்கு, ரூபாய் 408.51 கோடி மகளிர் தொழில் முனைவோர் கடனும், 72.512 மகளிருக்கு ரூபாய் 401.96 கோடி பணிபுரியும் மகளிருக்கான கடனும், 3,27,763 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 4,465.39 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் சமூகநலத் துறையை போல கூட்டுறவுத் துறையிலும், 4,402 பொது சேவை மையங்கள் அமைத்து, பட்டா, சிட்டா நகல், போக்குவரத்து பயணச்சீட்டு மற்றும், அரசின் சான்றிதழ்கள் வழங்கி 31.10.2018 வரை ரூ.100.52 கோடி வருவாயினை கூட்டுறவுச் சங்கங்கள் ஈட்டியுள்ளன.