திருச்சி, நவ.21: அரசு வழங்கும் நிவாரண தொகை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பது தொடர்பாக தாசில்தார்கள், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, திருச்சி மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி கஜா புயல் மழையினால் சேதமடைந்த பயிர்களை விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும் என்று வருவாய், தோட்டக்கலை, வேளாண்மை துறை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாழை, கரும்பு, எலுமிச்சை செடி, மரவள்ளிக்கிழங்கு, வெற்றிலை, மக்காச் சோளம், பப்பாளி, கத்திரி செடி போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளதை நேரடியாக களத்திற்கே சென்று பார்வையிட்டு விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும்.