திருச்சி, நவ.21: திருச்சி பாலக்கரையில் இருளில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற திருடனிடம் கடுமையாக மல்லுக்கட்டி விரட்டியடித்து10 பவுன்நகையை காப்பாற்றிக்கொண்டார். திருச்சி பாலக்கரை வடக்கு கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மகேஸ்வரி(35). நேற்றுமுன்தினம் மாலை பாலக்கரை பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து மின்சாரம் வராததால் இரவு 8 மணியளவில் மகேஸ்வரி அவ்வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பைக்கை திடீரென நிறுத்தினர். பின்னர் ஒரு நபர் மட்டும் கீழே இறங்கி வந்து மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதனால் சுதாரித்த மகேஸ்வரி நகையை கையில் இறுகப் பிடித்துக் கொண்டதால் பாதி நகை திருடன் பிடியிலும், மீதி நகை மகேஸ்வரி பிடியிலும் இருந்தது. இவ்வாறு 10 நிமிடம் நகையை பறிப்பதில் திருடனுக்கும், நகையை பறிக்க விடாமல் பெண்ணுக்கும் கடும் மல்லுக்கட்டு நடந்தது. கும்மிருட்டு ஒரு பக்கம், ஆள் நடமாட்டம் இல்லாதது மறுபக்கம்.