திருச்சி, நவ.21: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். திருச்சி கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் நெல் சம்பா சாகுபடி செய்துள்ள 14 வட்டார விவசாயிகளும் பகுதிவாரி அடிப்படை அணுகுமுறையில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன்பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.443 செலுத்த வேண்டும். சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசிநாளாகும். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி ஆலோசனை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.