முத்துப்பேட்டை நவ.21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஜா புயல் அவீடுகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், தொலைத்தொடர்பு டவர்கள், வாகனங்கள், கோயில்கள், மீனவர்களது படகுகள், சம்பா சாகுபடி பயிர்கள், லட்சக்ககணக்கான தென்னை, வாழை, மா, புளி, சவுக்கு மரங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அரசு முதன்மை செயலாளர்கள் என பலரும் களமிறங்கி மீட்புபணிகளை முடுக்கி விட்டுள்ளனர், ஆனாலும் பணிகளில் மந்தநிலையே தொடர்கிறது. நகரத்தை ஒட்டியுள்ள குக்கிராமங்கள் பலவற்றை அரசு எந்திரங்கள் இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை. மேலும் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு கூட சரிவர செய்துதரப்படாத நிலையில் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில் மழைவந்து மீட்புபணிகளை அவ்வப்போது முடக்கி வருகிறது. இதனால் மின் சீரமைப்பு பணிகளை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழையும் பெய்வதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து கஜாவை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காய்ச்சல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்தவாறு உள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.