×

திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாது மழை: கஜாபுயல் மீட்பு பணிகள் பாதிப்பு

திருவாரூர். நவ. 21:  திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரையில் இடைவிடாது பெய்த பலத்த மழையின் காரணமாக கஜா புயல் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. கஜா புயலின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருந்து வருகிறது.  இதனால் பொது மக்கள் குடிநீருக்கு கூட திண்டாடும் நிலை இருந்து வருவதால் இதனை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தின்ந்தோறும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கிடாரங்கொண்டான் பகுதியில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மின்துறை மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து  திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி என மாவட்டம் முழுவதும் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் பலத்த மழையும் அதன் பின்னர் 5 மணி வரையில் மிதமான மழையும் பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் மின் விநியோகத்தை சரி செய்யும் பணிகள் மற்றும் மரங்களை அகற்றும் பணிகள் உட்பட பல்வேறு மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvarur district ,Kajapalai ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி