ஈரோடு, நவ. 21: ஈரோட்டில் தறிப்பட்டறை தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு ராசாம்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (35). இவர் நேற்று முன்தினம் இரவு முத்து மாணிக்கம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 3 வாலிபர்கள், கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கிருஷ்ணமூர்த்தியை கீழே கிடந்த கட்டையால் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை தாக்கிய ஈரோடு வில்லசரம்பட்டி எஸ்எஸ்பி., நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சசிக்குமார் (23), ஈரோடு சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாண்டியன் (22), ஈபிபி நகர் பகுதியை சேர்ந்த நேசமணி என்ற மணி (22) ஆகிய 3பேரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.