நாமக்கல், நவ. 21: நாமக்கல் மாவட்டத்தில், 350 பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த 2012ம் ஆண்டு நேர்முகத்தேர்வு மூலம் 350 பகுதிநேர ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அவலலர் நியமித்தார். இவர்கள் பல்வேறு பள்ளியில் ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இவர்களின் சான்றிதழை சரிபார்க்கும் படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், 350 பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இந்த பணியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 8 குழுவினர் ஈடுபட்டனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
பணியில் சேர்ந்து 6 ஆண்டுக்கு பின், தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று உள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், அவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடத்தப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.