×

கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் மருமகள், பேரன் உட்பட 4 பேர் கைது

வேட்டவலம், நவ.21: கீழ்பென்னாத்தூர் அருகே சொத்து தகராறில் தந்தையை தடியால் அடித்து கொலை செய்த மகன், மருமகள், பேரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது(75) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராஜமாணிக்கம் தனது நிலத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை இறந்த அவரது மகள் ஜெயவேணி மகன் கிருபாகரன்(23) என்பவருக்கு எழுதி வைத்தாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் இவரது மகன் தேவேந்திரன்(53) என்பவருக்கும் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை வழுதலங்குணம் கிராமம் அண்ணாநகர் நிலத்தில் உள்ள வீட்டில் ராஜமாணிக்கம் அவரது மனைவி பவுனம்மாள் மற்றும் பேரன் கிருபாகரன் ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அங்கு வந்த மகன் தேவேந்திரன், அவரது மனைவி கலா(42), இவர்களது மகன் மோகன்(18), தேவேந்திரன் மைத்துனர் மகன் மணிகண்டன்(21) ஆகியோர் நிலப்பிரச்னை தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த தேவேந்திரன் கையில் வைத்திருந்த தடியால் ராஜமாணிக்கத்தின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் இதனை தடுக்க வந்த அவரது பேரன் கிருபாகரனையும் தேவேந்திரன் கையில் வைத்திருந்த தடியால் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்து ராஜமாணிக்கம் மனைவி பவுனம்மாள் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து தேவந்திரன், கலா, மோகன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சொத்து தகராறில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : sons ,son-in-law ,grandson ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி