திருச்சி, நவ.20: திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதலால் வாழை உள்ள விவசாய நிலங்களை கணக் கெடுப்பு பணியை வரும் 22ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் அந்தநல்லுார் ஒன்றியம், வயலூர் பகுதிகளில் கஜா புயலில் வாழைகள் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் வளர்மதி நேற்று ஆய்வு மேற்கொண்டு சேதம் குறித்த கணக்கெடுக்கும் பணியினை முடுக்கி விட்டார். அப்போது அமைச்சர் வளர்மதி கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் கஜாபுயல் மழையினால் அந்தநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர்,மணிகண்டம் ஆகிய ஒன்றியங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களும், எலுமிச்சை செடிகளும் சேதமடைந்துள்ளது. மணப்பாறை நகரப்பகுதியில் சாலை ஒரங்களில் உள்ள மரங்கள்முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்றைய தினமே சீரமைப்பு செய்யப்பட்டு சாலை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது. மணப்பாறை பகுதியில் 24கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கஜா புயலினால் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.