×

மின் கம்பிகள் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி, நவ. 20: தூத்துக்குடியில் மின் கம்பிகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசுக்கு சொந்தமான மின்கம்பிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடுப்போனது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் எஸ்ஐ ரவிக்குமார் விசாரணை நடத்தினார். இதில் தூத்துக்குடி பெரியசாமி நகரை சேர்ந்த லாரி கிளீனரான  ஜெகன் குமார் (20), மாரிமுத்து (19), சாந்திநகரை சேர்ந்த முகேஷ் (19) ஆகியோருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகளை மீட்டனர். பைக் திருடியவர் கைது: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் சேசுராஜ் (42). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் நிறுத்தியுள்ளார்.

இதை மர்ம நபர் திருடிச் சென்றார். இதனால் பதறிய சேசுராஜ் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் நடத்திய  விசாரணையில்  தூத்துக்குடி ராஜிவ் நகரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பைக்கை  மீட்டனர். மணல் கடத்திய வாலிபர் கைது: நாசரேத் எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாழையடி பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை சோதனை நடத்தினர். சோதனையில் மாட்டு வண்டியை ஒட்டி வந்தவர் நாசரேத் கொர்நேலியஸ் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ஆகாஷ் (27) என்பதும், அவர் அப்பகுதியில் ஓடை மணலை வண்டியில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்