தூத்துக்குடி, நவ. 20: தூத்துக்குடியில் ஆற்றுமணல் கடத்திவந்த லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்கள் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் எப்சிஐ குடோன் அருகே சிப்காட் எஸ்ஐ முத்துகணேஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அங்கு மணல் கடத்திவந்து நிறுத்தப்பட்டிருந்த 2 லாரிகளின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த துரைபாண்டி, பாஸ்கர் என்பவர்களுடன் சேர்ந்து விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் ஆற்று மணலை கடத்திவந்து தூத்துக்குடி பகுதியில் விற்பனைக்கு கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர்களான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (40), ஜட்சன் (35), தூத்துக்குடியைச் சேர்ந்த துரைபாண்டி, பாஸ்கர் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட லாரி ஷெட் உரிமையாளர் விக்னேஷ் ஆகிய 5 பேரையும் கைதுசெய்த போலீசார், மணலுடன் 2 மணல் லாரிகளையும் கைப்பற்றினர்.