மதுரை, நவ. 20: முல்லைப்பெரியாறு இருபோக பாசன பகுதியில், கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாம் போக சாகுபடிக்கு உழவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு மூலம் 1 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் பாசன சாகுபடியாகும். இதில் 43 ஆயிரம் ஏக்கர் ஆண்டுக்கு இருபோகம் விளையும் பூமியாகும். முல்லை பெரியாறு பாசனம் 43 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் கடும் வறட்சியால், முழுமையாக பொய்த்து போனது. 2014, 2015, 2017ம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழை சீசனில் பெரியாறு அணையில் 142 அடி தேக்கியும் முழுமையான விளைச்சலுக்கு விமோசனம் ஏற்படவில்லை. இருபோக சாகுபடிக்கு வழியின்றி ஒருபோகம் மட்டுமே கடந்த 3 ஆண்டாக நெல் விளைவிக்க முடிந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால், பெரியாறு அணை நிரம்பி கூடுதல் தண்ணீர் வந்தது. தேவையான தண்ணீர் இருந்ததால், ஜூன் மாத இறுதியில் இருபோக பகுதியான பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் நெல் பயிர் செய்து, தற்போது முதல்போக நெல் அறுவடை முடிவுடையும் நிலையில் உள்ளது.