மதுரை, நவ. 20: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வாகன காப்பகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தது. ஐகோர்ட் கிளை பதிவாளர்(நீதித்துறை) தரப்பில், தாமாக முன்வந்து தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள காலியிடங்கள் மற்றும் தெப்பக்குளம் அருகேயுள்ள இடங்களில் கடைகளுக்கு அனுமதியளித்து வருமானத்திலேயே கவனமாக உள்ளனர்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் இருசக்கர வாகன காப்பகத்தில் வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. விரகனூர், அனுப்பானடி, காமராசர் சாலை, அண்ணாநகர், பங்கஜம் காலனி பகுதியினர் பயன்பெறும் வகையிலான உரிய வசதிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தெப்பகுளம் மாரியம்மன் கோயில் வாகன காப்பகம் மற்றும் ெபாருட்கள் விற்பனைக்கான ஒப்பந்ததாரர்களுக்கு வழக்கு விபரம் குறித்து அறநிலையத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ.26க்கு தள்ளி வைத்தனர்.