விபத்தில் இறக்கவில்லை எனது கணவரை அடித்து கொன்று விட்டனர் கைக்குழந்தையுடன் கர்ப்பிணி கதறல்

திண்டுக்கல், நவ. 20: நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த மாதம் 13ம் தேதி டூவீலரில் சென்ற போது விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி நேற்று தீபலட்சுமி தனது கைக்குழந்தையுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு  கொடுக்க வந்தார். கதறி அழுதபடி அவர் கூறியதாவது: ‘‘எனது கணவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கான்ட்ராக்டரிடம் சம்பளம் வாங்கி வருவதாக கூறி சென்றவரை சிலர் வழிமறித்து வழிப்பறி செய்ய முயன்றனர். தொடர்ந்து அவரை தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். ஆனால் நரியூத்தைச் சேர்ந்த சோலைமலை என்பவரின் வாகனம் மோதியதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக நிலக்கோட்டை போலீசார் கூறுகின்றனர். ஆனால் அவருக்கோ அவர் வண்டிக்கோ சிறுபாதிப்பு கூட இல்லை. எனது கணவர் இடதுபுறம் சென்றுள்ளார். ஆனால் வலது புறத்தில் அடிபட்டு கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த செருப்பு சம்பந்தமே இல்லாமல் தூரத்தில் உள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது.

அங்கு மூன்று மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், கப் போன்றவை கிடந்துள்ளது. அங்கு எனது கணவரின் ரத்தக்கறை உள்ளது. வழிநெடுகிலும் எனது கணவரை இழுத்து வந்த ரத்தத்தடம் உள்ளது. இவற்றை பார்க்கும் போது எனது கணவரை சிலர் அடித்து  கொன்றுள்ளதாக தெரிகிறது. எனவே மாவட்டநிர்வாகம் உடன் தலையிட்டு எனது கணவர் இறப்பை முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். கைக்குழந்தையும் உள்ளது’’ என்றார்.

Related Stories: