கும்பகோணம், நவ. 20: வாழை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர் தருமராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் விமல்நாதன், விவசாயிகள் வரதராஜன், சாமிநாதன், துணைத்தலைவர் பிரகாசம் பேசினர்.
கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு 4 நாட்களாகியும் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட இதுவரை முன்வராமல் இருப்பதை கண்டிக்கிறோம். மத்தியக்குழு புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்து தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.