தஞ்சை, நவ. 20: கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு இயந்திரம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டுமென திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் வலியுறுத்தினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் தென்னை, வாழைகள் சேதமடைந்துள்ளன. புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதை அறிவோம். தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டவுடன் முதன்முதலாக வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். வேதாரண்யம் துவங்கி பேராவூரணி, பட்டுக்கோட்டை என அனைத்து பகுதிகளிலும் 2 நாட்கள் நேரடியாக முகாமிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்.