திருபுவனை, நவ. 20: புதுவை அருகே மாஜி எம்எல்ஏ ஒருவரின் கரும்பு தோட்டத்தில் ஒடிசா வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர், புதுச்சேரியை அடுத்த திருபுவனைபாளையத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, ஒரு வருடத்திற்கு முன்பு திருபுவனையில் நடந்த ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார். அவரது மகன், ஒடிசாவில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறான். இதனால் லட்சுமணன், பெரியபேட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார்.
இந்நிலையில் திருபுவனை அடுத்த பெரியபேட்டில் முன்னாள் எம்எல்ஏ காத்தவராயனுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் நேற்று மாலை, லட்சுமணன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லட்சுமணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிந்து கள்ளக்காதலால் தீர்த்துக் கட்டப்பட்டாரா? அல்லது முன்விரோதத்தால் கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரும்பு தோட்டத்தில் ஒடிசா வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே இக்கொலை தொடர்பாக திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சசி (எ) சசிக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான லட்சுமணனிடம் குடிப்பதற்கு காசு கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் நைசாக பேசி கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே சசிக்குமார் ஓரின சேர்க்கை விரும்பி எனவும் கூறப்படுகிறது. எனவே அவர் லட்சுமணனை ஹோமோ செக்சுக்காக அழைத்தபோது உடன்பட மறுத்ததால் கொலை செய்திருக்கலாம் என்ற என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.