புதுச்சேரி, நவ. 20: பாக்கமுடையான்பேட் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை பிடித்து கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுவை, பாக்கமுடையான்பேட், இசிஆரில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு ஆலங்குப்பம், முன்னூரைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவர் பெட்ரோல், டீசல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 வாலிபர்கள், வண்டிக்கு பெட்ரோல் போடுமாறு விக்னேஷிடம் கூறியுள்ளனர். அவர் பெட்ரோல் நிரப்ப முயன்றபோது, ஜீரோ காட்டவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அக்கும்பல் விக்னேசை அசிங்கமாக திட்டி கையால் தாக்கியதோடு அங்கிருந்த பங்க் பொருட்களை சேதப்படுத்தினார்களாம். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 3 பேரும் தப்பிஓடிவிட்டனர்.