பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி,  நவ. 20:   புதுவை, பாக்கமுடையான்பேட், இசிஆரில் ஒரு தனியார்  பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு ஆலங்குப்பம், முன்னூரைச்  சேர்ந்த விக்னேஷ் (22) என்பவர் பெட்ரோல், டீசல் போடும் பணியில்  ஈடுபட்டிருந்தார்.  அப்போது அங்கு பைக்கில் வந்த 3 வாலிபர்கள்,  வண்டிக்கு பெட்ரோல் போடுமாறு விக்னேஷிடம் கூறியுள்ளனர். அவர் பெட்ரோல்  நிரப்ப முயன்றபோது, ஜீரோ காட்டவில்லை என கூறி வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில்  ஆத்திரமடைந்த அக்கும்பல் விக்னேசை அசிங்கமாக திட்டி கையால் தாக்கியதோடு  அங்கிருந்த பங்க் பொருட்களை சேதப்படுத்தினார்களாம். மேலும் அவருக்கு கொலை  மிரட்டல் விடுத்துவிட்டு 3 பேரும் தப்பிஓடிவிட்டனர்.

 இதுகுறித்து  கோரிமேடு போலீசில் விக்னேஷ் முறையிட்டார். வடக்கு எஸ்பி  ரக்சனாசிங் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்  கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை  நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமிரா மூலம் தாக்குதல் நடத்திய ஆசாமிகளின்  பைக் நம்பரை கண்டுபிடித்த போலீசார் 3 பேரையும் அடையாளம் கண்டனர்.  அதன்படி தாக்குதலில் ஈடுபட்ட கருவடிக்குப்பம் தெத்துவாய் செந்தில்,  லாஸ்பேட்டை ராம்குமார், கொட்டுப்பாளையம் முண்டக்கண்ணு ஆனந்த் ஆகியோரை  தனிப்படை வலைவீசி தேடியது. அவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீசார்,  அங்கிருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பிஓடிய 3 பேரையும் தேடிவந்த  நிலையில் அவர்கள் அனைவரும் போலீஸ் வசம் சிக்கியதாக தெரிகிறது. அவர்களை  ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை அதிரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: