புதுச்சேரி, நவ. 20: புதுவை, சூர்கூப் வீதியில் வசிப்பவர் ராமமூர்த்தி (73). இவர் எஸ்ஆர் காங்கிரஸ் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஜூஸ் கடை சூர்கூப் வீதியில் உள்ளது. இதை ராமமூர்த்தியிடம் லாஸ்பேட்டை, வள்ளலார் சாலையைச் சேர்ந்த குமாரவேல் என்பவர் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலக்கெடு முடிந்துவிட்டதாக கூறி குமாரவேலுவிடம் கடையை காலி செய்யுமாறு ராமமூர்த்தி கூறினாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த குமாரவேலும், அவரது கடை ஊழியரான சந்திரசேகரனும் ராமமூர்த்தியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.