திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சைக்கிள் ரிக்ஷா மற்றும் லாரிகள் மூலம் கொண்டு சென்று மாட்டு மந்தை தெரு அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மலைப்போல் குவிந்துள்ள குப்பைகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். மாலை சுமார் 3 மணியளவில், குப்பைகளுக்கு இடையே சமன் செய்யும் பணியில் இருந்த பொக்லைன் இயந்திரம், சேரும் சகதியுமாக இருந்த பகுதியில் சிக்கி கொண்டது. அதில் இருந்த டிரைவர் பலமுறை முயற்சி செய்தும், மீட்க முடியவில்லை. இதைதொடர்ந்து மற்றொரு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சகதியில் சிக்கிய பொக்லைன் இயந்திரத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.