பஸ்சில் பயணி தவறவிட்ட 2.47 லட்சம் ஒப்படைப்பு : எம்டிசி டிரைவர், நடத்துனருக்கு பாராட்டு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக, அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த தடம் எண் 114ல், கடந்த 17ம் தேதி மாலை பணியில் நடத்துனர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் இருந்தனர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் பேருந்தில் பயணி ஒருவர், 2,47,000  ரொக்கத்தினை தவறவிட்டுச்சென்றிருந்ததை பார்த்தனர். உடனடியாக அந்த பணத்தை மீட்டு, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணியின்போது பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையுடனும், கடமை உணர்வுடனும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை மாநகர் போக்குவரத்துக் கழக  மேலாண் இயக்குநர், அன்பு ஆபிரகாம் நேற்று பல்லவன் இல்லத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் அழைத்து பாராட்டினார். மேலும் நினைவு பரிசும் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து 2019ம் ஆண்டு குடியரசு தின விழாவிலும் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: