பூந்தமல்லி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

சென்னை: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோட்டு (எ) சத்தியகிரிராவ் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து, பூந்தமல்லி பகுதியில் வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் அந்தப் பகுதியில் ரவுடி போலவும் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பிரியா(26) என்ற மனைவியும் லோகேஷ் (5), சர்வேஷ்(3) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மோட்டு ஆரம்பத்தில் சென்னை அயனாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட மோதலில், அவரை  கொலை செய்து விட்டு, பூந்தமல்லி பகுதிக்கு குடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று  சவாரி முடிந்ததும், தனது வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் இன்றி வறண்டு போன குளத்தில், நண்பர்களுடன் அமர்ந்து மோட்டு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் மோட்டுவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், சபீர் மற்றும் பூபாலன் உள்பட ஏழு பேர் அடங்கிய கும்பல் இந்த கொலை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: