நெல்லை, நவ.19: விகேபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜவகர் (54). இவர், விகேபுரம் காவல்நிலையம் எதிரே இரும்பு, பெயின்ட் விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்த போது கடையின் காம்பவுன்ட் சுவர் கிரில் கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையின் முன்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் பணம், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து ஜவகர், விகேபுரம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.