நெல்லை, நவ.19: நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் பொருநை மக்கள் இயக்க துவக்க விழா நடந்தது. பேராசிரியர் பொன்னுராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் கிருஷ்ணன், ராமானுஜம், அமலநாதன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் நாறும்பூநாதன் வரவேற்றார். பேராசிரியர் அருணன் வாழ்த்தி பேசினார். விழாவில் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகள் பேசியதாவது: மதம் என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. மதம் நிதானமானதாக, அன்பை பகிர்வதாக இருக்க வேண்டும். இப்போது மதம் மனிதனை மிருகமாக்கிவிடும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.பண்பாடு பயனற்று போனதால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரைச் சேமிக்க வழியில்லாத தமிழகத்தின் நிலை வேதனையளிக்கிறது. முல்லைப்பெரியாறு, காவிரி நதிகளைப் போன்று பிரச்னைகள் எதுவும் இல்லாத நதியாகவும், வற்றாத ஜீவநதியாகவும் பாய்ந்தோடும் தாமிரபரணி மீதான அக்கறை மிகவும் குறைவு. தாமிரபரணியை மட்டுமன்றி இயற்கையைக் காக்க இளம் தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்றார்.
நடிகை ரோகிணி பேசுகையில்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் மிகவும் ஆபத்தானவை. அதற்கு எதிராக போராடி வெற்றி கண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணியை குழந்தையைப் போல பராமரிக்க வேண்டும்.