வேலூர் வசூர் ராஜாவின் கூட்டாளியாக வலம்வந்தவர் குழவி கல்லை தலையில்போட்டு பிரபல ரவுடி கொலை

வேலூர், நவ.19: குடிபோதையில் டார்ச்சர் செய்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியாக வலம் வந்த ரவுடி குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலி, அவரது மகன் மற்றும் உறவினர் பெண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்பட வழக்குகள் உள்ளன. இவர் தற்போது சிறையில் உள்ளார். இவரது கூட்டாளி தங்கராஜ்(32). இவரும் பிரபல ரவுடி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த கல் உடைக்கும் கான்ட்ராக்டர் கோவிந்தன் கொலை வழக்கில் தங்கராஜூக்கு தொடர்பு உள்ளது. இவர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வஉசி நகரில் வசித்து வந்தார். ஏற்கனவே இவர் மீது 29 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சிறையில் இருந்த தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவருக்கும் சத்துவாச்சாரி இந்திரா நகரை சேர்ந்த தண்டுமாரி(40) என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதல் இருந்துள்ளது. வள்ளலார் பகுதியில் தண்டுமாரி டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். கள்ளக்காதலியான தண்டுமாரியிடம், தங்கராஜ் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு ரவுடி தங்கராஜ், தண்டுமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடி(எ)தமிழரசன்(20), இவர்களது உறவினர் கன்னியம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரவுடி தங்கராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த தங்கராஜை கத்தியால் வெட்டி உள்ளனர். மேலும் தலை மீது குழவி கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் மண்டை பிளந்து ரவுடி தங்கராஜ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன், தங்கராஜ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார், தப்பியோடிய ரவுடி தங்கராஜின் கள்ளக்காதலி தண்டுமாரி, அவரது மகன் தமிழரசன், கன்னியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். பிரபல ரவுடியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: