பீடி தராததால் பெட்டிக்கடைக்கு தீ வைத்த குடிமகன்கள்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மாணிக்கம் தெருவை சேர்ந்தவர் இம்ரான் (48). இவர் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு 11 மணிக்கு இரண்டு பேர் குடிபோதையில் இம்ரான் கடைக்கு வந்து காசு கொடுக்காமல் பீடி கேட்டுள்ளனர். அதற்கு இம்ரான், ‘‘காசு கொடுங்கள் பீடி தருகிறோம்’’ என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், ‘‘எங்களுக்கு பீடி கொடுக்காத கடை எதுக்கு வைத்திருக்கிறாய். தீ வைத்து கொளுத்தி விடுகிறோம்’’ என்று கூறி மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.

பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு டி.பி.சத்திரம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இம்ரான் நடத்தி வந்த பெட்டிக்கடை தீ பிடித்து எரிந்தது. உடனே போலீசார் அருகில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். புகாரின்பேரில், அயனாவரத்தை சேர்ந்த முனுசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: