சென்னை: லஞ்சம் வாங்கிய வேளச்சேரி பெண் சார்பதிவாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வரலட்சுமி. கடந்த 2014ம் ஆண்டு வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது, நிலத்தின் மதிப்பை விட குறைவான தொகைக்கு முத்திரைத்தாள் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி உரிய முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தால்தான் பத்திரம் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட ஆவணங்களை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க சார்பதிவாளர் வரலட்சுமி, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, அதை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வரலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.