×

சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டை 21ம் தேதி ஆன்லைனில் பெறலாம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.16: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீபம் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14ம் தேதி முதல் விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, வரும் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும்.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, இந்த ஆண்டும் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, அதிகாலை நடைபெறும் பரணி தீப தரிசனத்துக்கு ₹500 கட்டணத்தில் 500 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும்.

மேலும், மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு ₹500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், ₹600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் வழங்கப்படும். சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் பெற விரும்புவோர், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் வரும் 21ம் தேதி காலை 11 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி அவசியம் தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு டிக்கெட் மட்டுமே பெற முடியும்.

ஆன்லைனில் விபரங்களை பதிவு செய்ததும், செல்போன் எண்ணுக்கு ரகசிய எண் (ஓடிபி) வரும். அதை பதிவேற்றி, டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். தரிசனத்துக்கு வரும் போது, ஆன்லைன் டிக்கெட் மற்றும் அசல் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் என கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தெரிவித்தார்.

Tags : festival ,Tiruvannamalai Thirupattu ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!