23ம் தேதி ேதரோட்டம் கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 100% மானியத்தில் 50 நாட்டுக்கோழி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, நவ. 16: கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 100 சதவீத அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோழி வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 2018- 19ம் ஆண்டுக்கு ரூ.50 கோடி செலவில் கோழி அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 100 சதவீத அரசு மானியத்தில் ஒரு பெண் பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 பெட்டை, 25 சேவல் என 50 “அசில்” இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2,800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தால் வழங்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலிலும், நிரந்தரமாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராகவும், ஏற்கனவே இலவச கறவை பசுக்கள், வெள்ளாடு, செம்மறியாடுகள் திட்டத்தில் பயன்பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிலிருந்து தேர்வு செய்யப்படுவர். மேலும் தகுதி மற்றும் விருப்பமுள்ள மகளிர் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதியின் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் உரிய சான்று ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கோழி அபிவிருத்தி திட்டம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: