சேதுபாவாசத்திரம், நவ. 16: கஜா புயல் எச்சரிக்கையால் சேதுபாவாசத்திரம் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். நாகை- பாம்பன் இடையே கஜா புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதியில் முகாமிட்டு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பிரதீப்யாதவ், கலெக்டர் அண்ணாத்துரை, டிஆர்ஓ சக்திவேல், எஸ்பி செந்தில்குமார், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, ஆர்டிஓ மகாலட்சுமி, பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்தனர். கடலோர பகுதியில் நேற்று காலை முதல் ஒலிபெருக்கி மூலம் மாலை 4 மணிக்குள் புயல் பாதுகாப்பு இல்லம் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. புதுப்பட்டினம், கொள்ளுக்காடு, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், மனோரா, காரங்குடா, கழுமங்குடா, திருவத்தேவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தினார்.