கெங்கவல்லி, நவ.16: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா மஞ்சினிகேட் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், கெங்கவல்லி எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபர் ஒருவரை, எஸ்ஐ சிவசக்தி நிறுத்தினார். ஆனால், அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், எஸ்ஐ சிவசக்தி தனது டூவீலரில் துரத்திச்சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். விசாரணையில், அந்த வாலிபர் வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரமேஷ்(27) என்பதும், உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றவர், மது குடித்து விட்டு போதையில் டூவீலரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
ஏன் டூவீலரை நிறுத்தாமல் சென்றாய் என எஸ்ஐ கேட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ், எஸ்ஐயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து, வாட்ஸ்அப்பில் வெளியிட்டார். தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்ஐயுடன், போதை வாலிபர் வாக்குவாதம் செய்யும் வீடியோ, தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, ரகளையில் ஈடுபட்ட ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ள கெங்கவல்லி போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.