கோவை, நவ. 16: பொள்ளாச்சியில் நடந்த தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் கோவை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 650 பேர் பங்கேற்றனர். இதில், கோவை உக்கடம் தரீக்கத்துல் இஸ்லாம் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்ஷியா, ஷன்பியா பாத்திமா, சஹ்னா, சாகித் அப்ரிடி, சாகில், முகமது ஆசிக், அஸ்பக் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில், தரீக்கத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாத்தின் செயலர் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கபூர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபியாத், சாபிரா, கராத்தே மாஸ்டர் ஜமேஷா, பள்ளி மேலாளர் அப்துல் ரஹீம் உள்பட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.