திருக்காட்டுப்பள்ளி, நவ. 15: பூதலூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின்கீழ் பூதலூர், செங்கிப்பட்டி, மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உழவர் ரதம் மூலம் 2018-19ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள், மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டையின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயன்பாட்டில் இருக்கும் சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சிட்டா அடங்கல், புகைப்படம், விண்ணப்பம் மற்றும் முன்மொழி படிவம் ஆகிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் நடவு செய்தவுடன் காப்பீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பிரசாரத்தில் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள், வேளாண்மை அலுவலர் கவிதா, துணை வேளாண்மை அலுவலர் எபிநேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியன், கருணாநிதி, ஜான்சன், கலைவாணன், விக்னேஷ், இளந்திரையன் பங்கேற்றனர்.