பேராவூரணி, நவ. 15:பேராவூரணி அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதாகவும், போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியப்போக்குடன் டாக்டர்கள் செயல்படுவதாகவும் கலெக்டர் அண்ணாதுரைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை மற்றும் அதன் வளாகம், கழிவறைகளை ஆய்வு செய்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பேராவூரணி அரசு மருத்துவமனையில் தாசில்தார் பாஸ்கரன் மேற்பார்வையில் துப்புரவு பணிகள் நடந்தது. இதை வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி ஆய்வு செய்தனர். பேரூராட்சி தலைமை எழுத்தர் சிவலிங்கம் தலைமையில் வளாகம் முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. வளாகத்தில் புதர்போல் மண்டியிருந்த செடிகள் அகற்றப்பட்டு குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு புகை மருந்து அடிக்கப்பட்டது.