திருப்பூர், நவ.15: தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் மூன்றாம் கட்டமாக 6 கிராமங்களைச் சேர்ந்த 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தாராபுரம் மாம்பாடி கிராம பஞ்சாயத்து, பல்லடம் கே.அய்யம்பாளையம், காங்கயம் படியூர், குண்டடம் ஒன்றியம் கொழுமங்குழி கிராம பஞ்சாயத்து, உடுமலை ஊராட்சி தேவனுார்புதுார், ஊத்துக்குளி கருமஞ்சிறை கிராம பஞ்சாயத்து ஆகியவற்றில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.
டிசம்பர் மாதம் குடிமங்கலம் வீதம்பட்டி கிராமத்தில் 50 பயனாளிகள், உடுமலை ஒன்றியம் குறுஞ்சேரி கிராமத்தில் 50 பேர், 2019 ஜனவரியில் திருப்பூர் ஒன்றியம் மேற்குபதி கிராமத்தில் 50 பேர், குடிமங்கலம் ஒன்றியம் குப்பம்பாளையம் கிராமத்தில் 50 பயனாளிகள் என 200 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேற்படி, பஞ்சாயத்துகளில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் வகையில் கீழ்க்கண்ட தேதிகளில் கிராம சபா கூட்டம் வரும் 16 ம் தேதியும், இரண்டாவது சிறப்பு கிராம சபா கூட்டம் 23ம் தேதி நடக்கிறது. கிராம சபா உறுப்பினர்களால் மட்டுமே பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதால் கிராம மக்கள் தவறாமல் கலந்து கொண்டு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.