ஈரோடு, நவ. 15: டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்து அரசு பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
இதன்படி நேற்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை பள்ளி தலைமையாசிரியை சுகந்தி துவக்கி வைத்தார். பேரணியானது பள்ளியில் இருந்து துவங்கி பன்னீர் செல்வம் பார்க், பிரப்ரோடு, மாநகராட்சி அலுவலகம், பெரியமாரியம்மன் கோவில் அருகே திரும்பி மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து டெங்கு, பன்றி காய்ச்சல் தடுக்கும் வகையில் பாதாகைகளை ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.