ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு முயல்கள் வேட்டை அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் அவற்றின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், நயினார்கோவில், ஒன்றியங்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் ஏராளமான காட்டு முயல்கள் வசிக்கின்றன. ஆடு, கோழிகள் விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்கள் தற்போது காட்டு முயல்களையும் விட்டு வைப்பது கிடையாது. காட்டு முயல்களை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் விலைக்காக மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் முயல்களை வளர்ப்பு நாய் மூலம் துரத்தி பிடிக்கின்றனர். முயல்களை பிடிக்க நாய்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்கள் துரத்துவதால் ஓடும் முயல்கள் ஒரு கட்டத்தில் வேகம் குறையும்போது முயல்களை நாய்கள் பிடித்து விடுகின்றன. ஒரு சிலர் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடுகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் கண்மாய்கள், கருவேல மரங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவற்றில் வசித்த முயல்கள் உணவை தேடி கிராம பகுதிகளுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து அவைகளை வேட்டையாடுகின்றனர். காட்டு முயல்களை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் விலைக்காக மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். முயல், காட்டு விலங்குகள் ரூ.300 முதல் 400 வரை விலை போவதாகவும், அவற்றின் இறைச்சி ருசியாக இருப்பதாலும் பலரும் அதை விரும்பி வாங்குவது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதியில் காட்டு விலங்குகளின் இனமே விரைவில் அழிந்துவிடும் நிலை உருவாகி வருகிறது.
துகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அவ்வப்போது கிராம பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். முயல், கொக்கு ஆகியவற்றை பிடிப்போர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இருப்பினும் பலர் நாட்டு துப்பாக்கிகள் மூலம் அனுமதியின்றி இதையே தொழிலாக செய்து வருகின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.