காலாப்பட்டு, நவ. 15: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கஜா புயல் எச்சரிக்கையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் பெரிய முதலியார்சாவடியில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தை கலெக்டர் சுப்ரமணியன், விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர், சின்ன முதலியார்சாவடியில் உள்ள மீனவ கிராமத்திற்கு சென்று கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். கடற்கரையோரம் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுதொடர்பாக மீனவளத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.