திண்டுக்கல்லில் உரக்கிடங்கு அமைக்க தடை கோரி வழக்கு

மதுரை, நவ. 15:திண்டுக்கல் அண்ணாநகரில் உரக்கிடங்கு அமைப்பதை எதிர்த்த வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்த ரெங்கநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் பகுதியில் 420 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே காலியாக வுள்ள சுமார் 40 சென்ட் நிலத்தில் மாநகராட்சி சார்பில் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பதற்கான உரக்கிடங்கு அமைக்கவுள்ளனர். 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தொட்டி மூலம் 5 வார்டுகளைச் ேசர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் தொட்டி அருகே குப்பை கொட்டினால் சுகாதாரக் கேடு ஏற்படும்.

குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ளதால், ஈ மற்றும் ெகாசுக்களால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அருகிலுள்ள பள்ளிக்கு மாணவ, மாணவிகள் இந்த வழியாகத் தான் செல்ல வேண்டும். 50 மீட்டர் தொலைவிலுள்ள பூங்காவிற்கு வந்து செல்வோரும் பாதிப்பர். தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்வதை விட முன்கூட்டியே குப்பை உரக்கிடங்கு அமைக்காமல் இருப்பதே சிறந்தது. காலியாகவுள்ள நிலத்தில் நூலகம், அங்கன்வாடி உள்ளிட்ட நலப்பணிக் கூடங்களை கட்டினால் மக்களுக்கு நல்லதாக இருக்கும். எனவே, அண்ணாநகரில் குப்பை உரக்கிடங்கு அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் மனு குறித்து திண்டுக்கல் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ. 19க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: