×

போதையில் ஆட்டோ ஓட்டி மோதியதில் ஒருவர் பலி போலீசுக்கு பயந்து டிரைவர் தற்கொலை: துரைப்பாக்கத்தில் பரபரப்பு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் போதையில் ஆட்டோ ஓட்டி மோதியதில் ஒருவர் இறந்த விவகாரத்தில் போலீசுக்கு பயந்து, டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கந்தன்சாவடியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று சோழிங்கநல்லூர் நோக்கி வேகமாக சென்றது. துரைப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சுக்காக காத்திருந்த 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில், கும்பகோணத்தை சேர்ந்த தேவதாஸ் (30) என்பவர் அதே இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக எஸ்.ஐ தமிழன்பன் பைக்கில் அந்த ஆட்டோவை துரத்தினார். ஆட்டோ கண்ணகி நகரில் புகுந்து சாலையோர கடைகளை இடித்துக்கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் அங்கு உள்ள வேகத்தடையில் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இதையடுத்து உடனடியாக எஸ்.ஐ தமிழன்பன் ஆசாமியை மடக்கி பிடித்தார். போலீஸ் விசாரணையில் கண்ணகி நகரை சேர்ந்த ரஜினி (30) என்பதும், அதிக போதையில் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்தியது பொதுசொத்துக்களை சேதப்படுத்தியது, கடைகளை சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து ரஜினியை கைது செய்தனர். இதற்கிடையே, ரஜினியின் மனைவி காவல் நிலையத்துக்கு வந்து தனது கணவர் போதையில் இருப்பதால் தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், போதை தெளிந்ததும் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ரஜினியை போலீசார் விடுவித்துள்ளனர். மனைவியுடன் வீட்டுக்குச்சென்ற ரஜினி போலீசுக்கு பயந்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அவரது மனைவி கதறி அழுதார்.
தகவலறிந்து கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரஜினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், ரஜினி விபத்து ஏற்படுத்தியதில் பலியான தேவதாசின் சடலம் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : victims ,
× RELATED ஆழ்வார்பேட்டையில் கட்டிடம் இடித்து 3...