தற்கொலை மிரட்டல் விடுத்த மனைவியை தீவைத்து எரித்த கணவனுக்கு வலை

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், ராம் நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (35). இவரது மனைவி தாரணி (22). இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பாத்திர கம்பெனியில் வேலை செய்கின்றனர். சவுந்தரராஜன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்குள் வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தாரணி அலறும் சத்தம் கேட்டது. உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது, தாரணி உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில், சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த தாரணி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கணவரை மிரட்டியுள்ளார். தற்கொலை நாடகம் ஆடுவதை சகிக்க முடியாமல் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன் தீக்குச்சியை கொளுத்தி  தாரணி மீது போட்டுவிட்டு ஓடியது  தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய சவுந்தரராஜனை  தேடி வருகின்றனர்.

Related Stories: